Monday, January 29, 2007

பேறுயர் வீரமும் உதவாத ஜிகாதும்!

பதிவர் 'நண்பன்' ஷாஜஹானின் இந்தப் பதிவுக்கு இப்படி பின்னூட்டமிட்டிருந்தேன். சிந்தனைக்குரிய பதிவு.

வாசகன் சொல்கிறார்...
சீரிய சிந்தனையைத் தூண்டும் சம்பவத்தை சிறப்பான கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

எச்சில் துப்பிய
எதிரிக்கும்
காழ்ப்பு காட்டாத
கொள்கையின் கம்பீரத்தில்
பட்டொளி வீசும்
பேறுயர் வீரம்
போர்க்களத்திலும் அன்று!!

ஏகப்பட்ட இரத்தம்
சுவைத்த இச்சையில்
எச்சில் தேடி நீளும்
ஏகாதிபத்திய நாவுகளை
வெற்று உணர்ச்சியில் அமிழ்த்தி
உலர்ந்துப் போகும்
உதவாத ஜிகாது இன்று!!

(என்னுடைய இக்கவிதைப் பின்னூட்டத்தில் சொல், பொருள் குற்றமிருப்பின் தெரிவியுங்கள்).

2:11 PM

நண்பன் சொல்கிறார்...

ஜி, சல்மான், வாசகன் - மிக்க நன்றி.
வாசகன், கவிதை நன்றாக உள்ளது.
நீண்ட நாளைக்கப்புறம் பின்னூட்டத்தில் ஒரு கவிதை.
நன்றி.

அன்புடன்
நண்பன்...
----------------------------------------------
ஒரு நல்ல கவிஞரால் என் கவிதைப் பின்னூட்டமும், அதன் சொல்-பொருளும் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி!!

Friday, January 19, 2007

செல்போனில் பறந்த வதந்தி!

தமிழகத்தில் புதிதாக கிளப்பிவிடப்பட்டிருக்கும் அகல்விளக்கு ஏற்றும் வதந்தி பற்றி பலரும் பதிவு எழுதியுள்ளனர்.

வதந்தி வரிசையில் இன்னொன்றாக, முந்தாநாள், செளதி அரேபியாவில் யாரோ கிளப்பி விட்ட ஒரு வதந்தியால் தொலைத்தொடர்பு துறை பணம் அள்ளியது.

"Congratulations! Today is the aaniversary of SAWA. So forward this sms to 10 other people u will get free balance of SR.100/="

இது தான் அந்த வதந்தி. குறுஞ்செய்தியாக வந்தது. இச்செய்தியைப் படித்ததும் வேறெதையும் யோசிக்காமல் நூறு ரியால் பெறும் ஆவேசத்தில், முதல் வேலையாக 10 பேருக்கு sms அனுப்பியவர்கள் நிறைய பேர். எனக்கும் வந்தது.
என் கூட வேலைசெய்பவர்களே அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்தேன்:

"இங்க வாங்க" என்ன இது எஸ் எம் எஸ்?"
" அவர் எனக்கு அனுப்பியிருந்தாருங்க, அதான் நானும்அனுப்புனேன், நீங்களும் அனுப்புங்க"
"இருங்க, 10 எஸெம்மெஸ்ஸுக்கு ரெண்டர ரியால் ஆகுமே, நீங்க எப்படி யோசிக்காமல் செய்யறிங்க?"
"அட, ரெண்டர ரியாலப் பாத்தா முடியுங்களா..! நூறு ரியால் கெடைக்குதுல்ல.."
"இருங்க, நூறு ரியால் கெடைக்குதுன்னு நிச்சயமாத் தெரியுமா..?"
"பின்னே... எல்லாரும் அனுப்புறாங்களே..!"
"எல்லாரும் அனுப்புறாங்கன்னு சொல்லாதீங்க..., நிச்சயம் 100 ரியால் கெடைக்கும்னு எப்படி கன்ஃபார்மா சொல்றீங்க?"
"என்ன செய்யணும்?"
"முதல்ல.., எஸ்ட்டிசி (தொ.தொ.து)க்கு போன் போடுங்க, ஃப்ரீகால் தானே.."

அவர் அப்படியே செய்துப்பார்த்தார், அவர்கள் 'நம்பாதீர்கள், வதந்தி' என்று சொல்லிவிட, அவர் முகம் சுருங்கிவிட்டது.

"சரி,சரி, போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

Monday, January 15, 2007

நொய்டா-கொடூரக்கொலைகள்.


நொய்டா அருகில் நிதாரி கிராமத்தில் நடந்துள்ள படுகொலைகள் எத்தனை மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியைத் தருகின்றன. கொலையுண்ட அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம்.கொலையின் கோரங்களும் நோக்கங்களும் தெரிய வர வர, மனம் பதறுகிறது.


இக்கொடூரக்கொலைகளின் பின்னணி மர்மம் குறித்து பலப்பல செய்திகள் உலா வருகின்றன.

1). மனித உறுப்புக்களை விற்பதற்காக

2). சடலங்களுடன் கொள்ளும் பாலியல் வன்மங்களுக்காக (Necrophilia)

3). பயங்கரமான மதச் சடங்கிற்காக-என்றும்
பல கருத்துகள் உலா வருகின்றன. மிகுந்த மன பிறழ்வும் விகாரமுமடைந்த மனிதர்களின் செயல்கள் இவை என்பதில் சந்தேகமில்லை. இந்த விகாரமும் விவகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் மட்டுமே முடிவது என்று நாம் கூற இயலாது.

சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனது பற்றிய புகார்களில் அக்கறை செலுத்தாத காவலர்கள், அப்பகுதி துப்புரவு மற்றும் நகரசபை தொழிலாளர்கள், அலுவலர்கள், மெளனத்தில் மூழ்கியா அக்கம் பக்கத்து மக்கள் என்று நிறையப் பேர் விசாரிக்கப்படவேண்டியவர்கள்.


" இது ஒரு தேசிய அவமானம்" என்கிற எல்.கே.அத்வானியின் கூற்று சரியானதே!
"இந்த சம்பவத்தை அரசியல் கோணத்துடன் அணுகுவது சரியல்ல" என்று கூறிய அவர், "இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார். ஆனால் அரசியல் கட்சிகள் எதுவும் அடுத்து வரும் உ.பி. மாநிலத் தேர்தலில் இக்கொடுமையான சம்பவத்தை பயன்படுத்தாமல் இருக்கும் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பெற்றோரும், பிறரும் மிகுந்த கொதிப்புற்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 'சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது' என்று உபதேசம் செய்யுமுன் அவர்களின் மனநிலையைப் புரிந்து, குற்றம் நிரூபணமானதும் கடும் தண்டனைத் தரப்படும் என்கிற உறுதியை அவர்களுக்கு அரசு அளிப்பது சற்றே ஆறுதலாக இருக்கும். அரபு நாட்டுத் தண்டனைகள் வருங்காலத்தில் இத்தகைய அவலங்கள் நிகழாதிருக்க உதவும்.

இந்நிலையில் இன்று வந்த தினமணி செய்தி, மனித உறுப்பு வியாபாரத்துக்காக இக்கொலைகள் நடக்கவில்லை என்று சொல்லும் வகையில் மனித உறுப்புகளின் 12 மூட்டைகள் சிக்கியதாக கூறுகிறது.

எதுவாக இருந்தாலும் முறையான விசாரணை நடந்து இதன் பின்னணியில் இருக்கும் யாரும் தப்ப முடியாத படி - எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கச்செய்து இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சு மற்றும் மின் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும்.




Sunday, January 14, 2007

சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்!

தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து.....

‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.
‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல் நாள் _ சமையலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம், காலை, மதியம், இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினைத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால், உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு, ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு ‘தினமும் எனக்கு சமையல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா?’ என்றேன்.
‘இல்லை அவர்தான் சதாம்’ என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.
சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடைய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி, சிறையில் வைத்துவிட்டார். பிறகு, இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு, பத்து நாட்கள் கழித்து அனைவரையும் விடுவித்தார்.
அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.
டீயில் சர்க்கரை போட்டுக்கொள்ளமாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம், சிக்கன் ஃப்ரை, காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட், ரொட்டி, சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.
ஒரு நாள் சதாம் என்னிடம் ‘நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியைச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?’ என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி, ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்லை. நம்ம சமோசாதான்!
ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள்.
சதாம் உசேன் அரண்மனையில் எந்தச் சமையல்காரரையும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள். காரணம், சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரைன்வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோபாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.
ஒரு நாள் அரண்மனையிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்,கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து ‘எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்’ என்றார்கள். நான் அதை முழுமையாக மறுத்துஅவர்களைக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட, ‘என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு, காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் சதாம் என்னை அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
‘ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, எனது சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!
வளைகுடா போரின்போது, சதாம் என்னிடம் ‘மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்’ என்றார். நான் மறுத்தேன். ஆனால், அவர்விடவில்லை. ‘நான் எனது நாட்டிற்கும், மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!’ என்று வற்புறுத்தினார்.
‘அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள், தூக்கிச்செல்ல முடியாவிட்டால், ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்’ என்று கூறி அப்படியே செய்தார்.
நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து ‘எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்’ என்றார்.
எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து, பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...’’ _ கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.


நன்றி: குமுதம்

Saturday, January 06, 2007

BAD Taste

//வாசகன் said... நல்ல பதிவு ஜி.கே சார்.

தன்மதக்குறைகள்
தாராளமிருக்க
எம்மதக்குறையோ
எடுத்துச்சொல்லும்
சிறுமதியாளர் தம்மின்
செயலும் BAD Taste!

சர்ச்சையில் உழன்று
சங்கடம் விளைத்து
நலமொன்றுமின்றி
'நான்' எனத் தெரிய
நாட்கள் நகர்த்தும்
நண்பருக்கும் BAD Taste!

இலக்கியம் இனிமை
எதுவும் வேண்டார்.
விலக்காது வெறுப்பை
வேண்டிச் சுமப்பார்.
பின்னூட்டப் பிரியர்
பலருக்கும் BAD Taste! //

என்று கோவி.கண்ணன் ஐயா அவர்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

அதை கோவி.கண்ணன் ஐயா உற்சாகமாகப் பாராட்ட, 'அட நமக்கும் எழுத வருகிறதே' என்று நானும் பதிவு தொடங்கிவிட்டேன்.

//வாசகன் ஐயா,கவிதையை வடித்துகருத்தை சொல்லிவிட்டீர்கள்.நன்றாக இருக்கிறதுஎழுத்தும் பொருளும்.ரசித்தேன் கவிதையையும் கருத்தையும். //- கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது.

நன்றி GK சார்.

மனிதனின் வன்முறை உணர்வு

சமீபத்தில் (1972ல் அல்ல), இரண்டு மூன்று நாட்களுக்கு முன் 'தீராநதி'யில் பிரேம்-ரமேஷ் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். மனிதனின் வன்முறை உணர்வு பற்றி சுவையாக எழுதியிருந்தார். சில பத்திகளை எடுத்து இங்கு பதிகிறேன். கருத்திருப்பவர்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்::

பயங்கரவாதம் என்றவுடன் நமக்கு நினைவூட்டப்படுவது சில கட்டடங்களின் தகர்ப்பு, சில ரயில் வெடிப்பு, சில தலைவர்கள் கொலை செய்யப்படுவது என்பவை போன்றன. உண்மையில் நம்மை நடுங்கச் செய்யும் நிகழ்வுகள்தாம் இவைகள், ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terrorism) என்பது அதைவிட நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்லவா. 2001 ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன், உலகில் எங்கும் பயங்கரங்கள், வன்முறைகள் நடக்காதது போலவும், அன்றுதான் மனித குலத்துக்கே நாசம் வந்து சேர்ந்ததாகவும் தொடங்கப்பட்ட பேச்சுக்கள், கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள், எத்தனை வன்கொடுமையானது. அதனை ஒரு சாக்காக வைத்து ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் தரைமட்டமாக்கப்பட்டது, பேரன்பின் அடையாளம் போலப் பேசப்படுகின்றன. இராக்கில் சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு பன்னிரண்டு இலட்சங்களைத் தாண்டுகிறது. தினம் இரண்டு மூன்று கார் குண்டு வெடிப்புகள் ர்ராக் மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சரி இதனால் ‘பயங்கர வாதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வன்முறை நியாயமானதாகி விடுமா. இல்லை; எல்லா வன்முறைகளும் கொடூரமானதே. ஆனால், மனிதர்கள் அதைப் பெருக்கிக் கொண்டே இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் எப்பொழுதும் வன்முறை செலுத்த, பிறர் மீது செலுத்தப்படும்போது பார்த்து ‘ரசிக்க’ தயாராக இருப்பதற்கு எல்லாவிதமான தயாரிப்புகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதம் என்பது போர் அல்ல, போர் செய்ய முடியாதவர்களால் போர் வலிமை உடையவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. அதில் ஒரு அரசு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வர்க்கம், ஒரு தலைமை எது வேண்டுமானாலும் குறிவைக்கப்படலாம். எந்த வகையிலும் அத்துடன் தொடர்பற்ற மக்களும் பாதிக்கப்படலாம். அது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமை. இதைச் செய்பவர்களின் நோக்கம் தீர்வு அல்ல, வெறும் எதிர்ப்பு_வெறுப்பு; இதற்குப் பின்னுள்ள பிரச்சினையை நோக்கி அனவைரையும் இழுத்துவிட அவர்கள் செய்யும் முயற்சி. இது ஒரு ‘நவீனத்தொழில் நுட்பம்’. நவீன அழிவுக் கருவிகளால், உத்திகளால் நிகழ்த்தப்படுவது. சில ஆய்வாளர்கள் இது வெகுசன ஊடகங்களின் காலகட்டத்தில், ஊடகங்களில் இவற்றிற்கான சொல்லாடல் களத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுபவை என்று கூறுகிறார்கள். ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதோ, இயக்கங்களின் திட்டமிடுதலில் நடப்பதோ, எதுவானாலும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கவே செய்யும். மக்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் என்பவை இதிலிருந்து தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவே செய்கின்றன. ஆனாலும் இது எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. ‘நவீன பயங்கரவாதம்’ என்பது வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருக்கலாம். ஆனால் படுகொலை, வன்கொடுமை, திட்டமிட்ட தனித்தாக்குதல் என்பவை மனித இன வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நடந்து கொண்டே இருப்பதுதானே. இங்குதான் சிக்கல் எழுகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் ‘அறம்’ வன்முறையை மனிதர் மீது மனிதர் செலுத்தும் வன்கொடுமையை எதிர்க்கிறதா; அல்லது அதிகாரபூர்வமான, நியாயப்படுத்தப்பட்ட வன்முறை நிறுவனங்களைத் தவிர (அரசுகள், இராணுவங்கள், பலவகைப்படைகள்) வேறு யாரும் வன்முறையில் ஈடுபடுவதை எதிர்க்கிறதா. இதற்குப் பதில் கூறப் போகும் முயற்சியில்தான் ‘மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள்’ என்ற வாசகம் நம்மை எதிர்கொள்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில பயங்கரங்களை, பாதகங்களை, சற்றே நினைவுபடுத்திக்கொள்வது நமது உறக்கத்தை, தொந்தரவு செய்வது என்றாலும், தற்போது தேவை இருக்கிறது. தற்போது பேசப்படும் ‘மகாபாதக செப்டம்பர்’ 11 போல், 1973 ஆண்டு ஒரு செப்டம்பர் 11 இல் சிலியின் தலைநகரில் ஒரு படுகொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசை, அமெரிக்கத் துணைப்படை அழிக்கப் புறப்பட்டு, ஒரே நாளில் 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் தினம் கைதும் படுகொலையுமாக எத்தனை ஆண்டுகள்! ஆனால், உலகம் இப்போது போல் பெரும் சோகத்தில் மூழ்கிடவில்லை. (தொலைக்காட்சி இப்போது போல் அதைப்படம் பிடிக்காதது மட்டும் காரணம் அல்ல). ஆனால், 9/11 என்று புதிய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்க, தற்போது அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ பயன்படுகிறது. இனி உலகை ஆட்டிப்படைக்க இது ஒரு பயங்கர ஆயுதம்.
1945_செப்டம்பர் மாதம் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சிமின் Democratic Republic of Vietnamஇன் சுதந்திரப்பிரகடனம் செய்கிறார். அதுவரை இந்தோசீனா என்ற பெயரில், பெரும் நிலப்பரப்பை அடிமை கொண்டிருந்த வன் கொடுமையாளர்களுக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. வியட்நாம் மண்ணை இரண்டாகப் பிரித்து, பெரும் நாசத்தை விளைவித்த போரைத் தொடங்கினர். பத்து ஆண்டுகள் பிரஞ்சுப் படையினரின் அட்டூழியம், 1955 முதல் அமெரிக்கப்படையினரின் அட்டூழியம். அப்பொழுதும் வியட்மின்களை பயங்கரவாதிகள் என்றே கூறினர், அமெரிக்க நிர்வாகிகள். 1975 வரை எத்தனை இலட்சம் மக்களின் உயிரிழப்பு, எத்தனை ஆயிரம் பேரின் ஊனம், எத்தனை பெரிய மனநோக்காடு. அதற்காக அமெரிக்கா செய்த செலவு எத்தனை மில்லியன் டாலர்கள். வியட்நாமை இரு பகுதிகளாக்கி பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. இன்றைய ஈராக்கில் ஷியா_சன்னி என்ற பிரிவினையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் படுகொலை வெடிப்புகள் போல. இதைப்பற்றி ஜான் பிட்சரால் கென்னடி ‘‘‘‘We shall pay any price, bear any burden meet any hardship, support any friend oppose any foe to insure the survival and success of Liberty’’ என மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்போது உள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோல் உலக அமைதியைக் காக்க எதையும் எப்படியும் செய்யத் தயாராக இருக்கிறார்.
1948இல் இரண்டாம் படுகொலைப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப்பின் பாதிக்கப்பட்ட யூத இன மக்களைக் காக்க அமெரிக்க_ ஐரோப்பிய நாட்டு மனிதாபிமானிகள் ஒன்றுகூடி ஒரு நாட்டை உருவாக்கினார்கள்: இஸ்ரேல், யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நாஜி தாக்குதல் வரலாற்றின் பெருங்கொடுமையானதே. ஆனால், ஐரோப்பியர்கள் தமது நிலப்பகுதிக்குள் ஒரு நாட்டை, நிலத்தை ஒதுக்கி ஒரு குடியேற்ற தேசத்தை உருவாக்கித் தந்து தமது மேலான மனிதநேய மெல்லுணர்வுகளை நிரூபித்திருக்கலாம். புதிதாக ஒரு நாட்டை வேறு நாட்டுக்குள் இடம் ஒதுக்கி நட்டதன் மூலம் ஐம்பதாண்டு ரத்தக்களரியை உருவாக்கி விட்டனர். பாலஸ்தீனத்தின் தினசரிப் போராட்டம் இப்படியாகத் தொடங்கியது. அராபிய மண்ணில் தமக்கு ஒரு இராணுவத் தளத்தை ‘இஸ்ரேல்’ என்ற பெயரில் அமெரிக்கா உருவாக்கிக்கொண்ட படுபாதகச் செயலின் விளைவுதான், பின்னால் வந்த பல தனிநபர் தாக்குதல் இயக்கங்கள், யாசர் அராபத் போன்றவர்களையும் பல காலம் பயங்கரவாதி என்றே கூறி வந்தன மேற்கத்திய அரசுகள். பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதும், சோவியத்துக்கு எதிராக ஒசாமா பின்லாடன் என்ற தாக்குதல் தளபதியை அமெரிக்கா உருவாக்கி உலவவிட்டதும் இந்தப் பின்னணியில்தான்.
1994ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாத நாளில் ருவாண்டாவில் தொடங்கிய வன்முறை, கடந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான வன்முறைகளில் ஒன்று. இரண்டு ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கிடையிலான வன்மம். ‘ஹ§டு’ என்ற இனமக்கள் ‘டுட்சி’ என்ற இனமக்களில் 80,0000 பேரை மூன்று மாதத்திற்குள் மகாகொடூரமான முறையில் கொன்று குவித்தனர். பல ஹ§டு இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் அந்தப் படுகொலை அங்குமிங்குமாக நிகழ்ந்தபடியே இருந்தது. உயிரிழப்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. இதில் ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். இதைத் தொடங்கி வைத்தவர்களே ஐரோப்பிய ஆட்சியாளர்கள்தான். முதலில் ஜெர்மனியின் ஆதிக்கத்திலும் பிறகு பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலும் ருவாண்டா இருந்தபோதுதான் ஹ§டு_டுட்சி என்ற எதிர்ப்பு இன அடையாளம் வன்மைப்படுத்தப்பட்டது. தமது ஆதிக்கத்தை நிறுவ _ தொடர இந்த இன வெறுப்பு தூண்டி வளர்க்கப்பட்டது. பழங்குடிச் சமூக அரசுகளாக இருந்த இந்நாட்டின் மக்கள் குழுவினரை ஒன்றாக நெருக்கி நாட்டை உருவாக்கி, 10 பசுக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ‘ஹ§டு’ என்றும், 10க்கு மேல் பசுகொண்ட மக்களை ‘டுட்சி’ என்றும் சட்டப்பதிவு செய்து, ‘டுட்சி’ மக்களுக்கு சில அரசு சலுகைகள் தருவதன் மூலம் பெரும் பான்மை ஹ§டு மக்களிடம் வன்மத்தைத் தூண்டி ஒரு நீடித்த இனமோதலை ஏற்படுத்தியது, பெல்ஜிய ஆதிக்கம். 1994_இல் நடந்த படுகொலைக்கு ஆயுத உதவி செய்தது பிரான்ஸ் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. படை உதவியும் செய்ததாக தற்போது தெரியவருகிறது. இனமோதலை முன்பெல்லாம் சிறிய போர்களின் மூலம் தீர்த்துக்கொண்ட வரலாறு, தற்போது நவீன உத்திகளால் படுபயங்கரமாக மாற்றப்பட்டுவிட்டது.


நன்றி: 'தீராநதி'

என்னத்த எழுத!

என்னத்த எழுத...என்று எண்ணிவந்ததாலேயே இதுவரை பிரயோசனமாக எதையும் வலைப்பதிய விரும்பாதிருந்தேன். ஆங்காங்கே சில கருத்துக்களை மட்டுமே தூவி வந்துள்ளேன்.

'எதையேனும் எழுது. எழுதுவது உனக்கோ, மற்றவருக்கோ... எப்போதாவது ஏதாவது நற்பலனளிக்கும் வகையில் இருக்குமாறு மட்டும் பார்த்துக்கொள்' என்று சில நண்பர்கள் சொன்னதால் சரீன்னு வலைப்பதிய வந்துட்டேன்.

படிச்சிட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோனுச்சுன்னா... சொல்லிட்டுப் போங்க.